“வங்கிகள் மறைந்து நேர்மையானவர்களே தனி வங்கிகளாவார்கள்.”
“நிலப்பதிவு அலுவலங்கள் மறைந்து நேர்மையானவர்களே தனி நிலப்பதிவாளர்களாவார்கள்”
இப்படி ஆரம்பித்து நீண்டு கொண்டே போகிறது, கூடிய விரைவில் காணாமல் போகக்கூடியவைகளின் பட்டியல்.
நம்பிக்கையாக பரிவர்த்தனைகளை நம்மிடையே நிகழ்த்திக்கொள்ள நாம் ஏற்படுத்திக் கொண்ட அனைத்து பெரு நிறுவனங்களையும் அமைப்புக்களையும் என்னால் கரைத்து இல்லாமலாக்கி விட முடியுமென்று மார்தட்டி நிற்கிறது வளர்ந்து வரும் புது தொழில்நுட்பமான ‘Blockchain ‘. இணையத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல் இது என்கிறார்கள் வல்லுநர்கள். இணையம் தகவலை பரவலாக்கியதென்றால், Blockchain அத்தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் என்கிறார்கள். இது என்னுடைய ‘Audi’ வாகனம் என்று முகநூலில் பொய்யான முகப்புப் படம் போட்டால், நம் முகத்திரையை உடனே கிழித்துப் போட்டு விடக்கூடிய சக்தி படைத்த இந்த Blockchainஐ நம்பிக்கைச் சங்கிலியாகத்தான் உருவகிக்க வேண்டியுள்ளது.
மனிதர்கள் தங்களுக்கிடயேயான பரஸ்பர நம்பிக்கையை இழந்ததாலோ அல்லது நம்பிக்கையின் தேவை அதிகரித்ததாலோ உருவாக்கப்பட்டதுதான் இங்குள்ள அனைத்து பெரு அமைப்புகளும். மிகத் துல்லியமாகச் சொல்லவேண்டுமென்றால் இவ்வமைப்புகள் அனைத்துமே நமக்கு நம்பிக்கையை விற்று காசாக்கும் தரகர் வேலையைத்தான் செய்கின்றன. உங்களுக்கு நீங்களே தரகராகி, இவ்வமைப்புகளின் தேவையை இல்லாமல் ஆக்குவது தான் இந்ந Blockchain தொழில்நுட்பம். கார்ல் மார்க்ஸ் நினைவில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. இது ஒரு மிகச் சிக்கலான தொழில்நுட்பத்தின் எளிமையான விளக்கம் மட்டுமே.
*Blockchain – Explained *
“Whereas most technologies tend to automate workers on the periphery doing menial tasks, Blockchains automate away the center. Instead of putting away the taxi driver out of job, Blockchain puts Uber out of job and lets the taxi drivers work with the Customer directly”
– Vitalik Buterin, founder of the Ethereum Blockchain .
Blockchain பற்றிய மிகப் பிரசித்திபெற்ற இந்த மேற்கோளுடன் தொடங்கும் இப்புத்தகம் இத்தொழில்நுட்பத்தின் நடைமுறை சாத்தியங்களை விரிவாகப் பேசியுள்ளது. அதே சமயத்தில் இதற்கான அவசியம் இப்போதென்ன என்ற கேள்வியும எழாமலில்லை. 20 வருடங்களுக்கு முன்பு இணையத்தின் தேவையும் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் நாம் இப்போது தகவல்களுக்காக பல நாட்கள் காத்திருக்கும் நிலைக்குத் திரும்பமுடியுமா? மின்சாரமும் அதுபோலத்தான். வெளிச்சத்தை விற்று காசாக்கினார்கள்; தகவலை விற்று காசாக்கினார்கள்; இப்போது நம்பிக்கையை விற்று காசாக்கப் போகிறார்கள் என்ற கூக்குரல்களையெல்லாம் தாண்டி நம்மை Blockchain பற்றிக் கொள்ளும் என்றே தெரிகிறது.
இதன் முதுகெழும்பானவரான ஜப்பானிய கணினி பொறியாளரை 2011 முதல் காணவில்லை என்கிறார்கள். உண்மையிலேயே அப்படி ஒருவர் இல்லை என்ற வதந்தியுமுண்டு. சமூகத்தின் ஸ்திரமான அமைப்புகளை அசைத்துப் பார்க்கப்போகும் இத்தொழில்நுட்பம் மர்மங்களுக்கு குறைவில்லாமல் இருக்குமா என்ன?