கைவிடப்பட்ட அந்த விவசாய நிலத்தைவிட்டு சூரியனும் தன் கதிர்களை வெகு விரைவாக விலக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாலைப்பொழுது அது. நெல் நாற்றுகளுக்குப் பதிலாக அங்கு நடப்பட்டிருந்த கைப்பேசிகளுக்கு உயிரளிக்கும் நெடிய கோபுரத்தை நோக்கி தன்தோள்களிரண்டும் தளர , நடை தடுமாற, தலைதுவள கைகளிரண்டையும் விரித்து உயர்த்தியவாரே ‘’நன்னயப் புள்ளினங்காள் …” என்று முனகி முழங்கிச் செல்கிறார் ஒரு முதியவர்.
இப்பொன்னுலகமும், பிரபஞ்சமும் பறவைகளால் ஆனது; ஆளப்படுவது என்ற நம்மாழ்வாரின் வரிகளான
“பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப் புள்ளினங்காள்” என்ற வரிகளை முனங்கிக் கொண்டேதான் பறவைகளின் காதலனும்; காவலனுமாகிய பக்ஷிராஜன் அந்த கோபுரத்தில் தூக்கிட்டு தன்னுயிரைப் போக்கிக் கொள்கிறார். கோபுரத்தினடியிலிருந்து படம்பிடிக்கப்பட்ட அக்காட்சியில் உறைந்திருந்த பார்வையாளர்களின் முப்பரிமாண கண்ணாடியோடு, உடல்துடித்து காலுதற கயிற்றிலிறந்து போய்கொண்டிருக்கும் பக்ஷிராஜனின் முகத்திலிருந்து கழன்று விழும் கண்ணாடியும் திரையைத் தாண்டி வந்து ஒட்டிக்கொள்கிறது. 2.0 வில் வரும் இந்த முதல்காட்சியும்; முதல் வசனமும் பக்ஷிராஜனின் கண்களின் வழியாகத்தான் ஒட்டுமொத்த படமும் பார்க்கப்படவேண்டும் என்பதை குறிப்புணர்த்துவது போலுள்ளது.
படம் முழுதும் இயக்குநர் சங்கரின் படைப்பூக்கமும், அதை திரையில் கொண்டு வருவதற்கான அவரது குழுவினரின் அயராத உழைப்பும் மிரள வைத்துக்கொண்டே இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, பார்வையாளர்களை பெருவாரியாக திரையரங்குகளை நோக்கி ஈர்த்த ஒரு படைப்பு. குறிப்பாக ஒரு மூன்று மணி நேரமாவது கைப்பேசியின் தொடுதிரை தன்னை சீண்டாமல் இருந்ததற்காக நம் விரல்களுக்கு நன்றி சொல்லியிருக்கும். இக்காலத்து கைப்பேசிகளுக்கும் ஒரு பக்ஷிராஜன் தேவை, நம்மிடமிருந்து அவைகளையும் பாதுகாக்க!!!
பெரும்பாலும் தங்கள் சொந்த வாழ்க்கையை தான் கொண்ட இலட்சியங்களுக்காகவும் கொள்கைகளுக்காகவும் பரிசோதனைக்கூடமாக மாற்றி, அதை பொதுவெளியிலும் காட்சிப்படுத்தக்கூடிய இலட்சியவாதிகளை உதவாக்கரையாகத்தான் இவ்வுலகம் பார்க்கிறது. புவிமையக் கொள்கையை(Geocentric) மறுத்து, சூரியமையக்கொள்கையை(Heliocentric) முன்வைத்த கலிலியோ முதல் இன்றைய பக்ஷிராஜன் வரை இதற்கு எவருமே விதிவிலக்கல்ல. கலிலியோவைக் காவுகொண்டது, அன்று மக்களை ஆண்ட மதம் என்றால்; பக்ஷிராஜனை இன்று மக்களையாளும் வியாபாரம் காவு கொள்கிறது.
மக்கள் தொடங்கி,வியாபாரிகள், அரசியல்வாதிகள் என நீதிமன்றம் வரை அனைத்து இடத்திலும் உதாசீனப்படுத்தப்படும் இந்த பறவைக்காதலர், இறுதியில் வேறு வழியின்றி தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். கைப்பேசிக்கான கோபுரங்களிலிருந்து வெளியேறும் கதிரியக்கத்தால் மாண்டுபோகும் மென்பறவைகளை விட மென்மையானவராய் அக் ஷய் நம்மை வெகுவாய் பாதிக்கிறார். இதுபோன்ற நியாயமற்ற சாவுகளுக்கு பதில்தான் என்ன, என்ற சாமான்யர்களின் கேள்விக்குப்பதிலாக பக்ஷியின் ஆன்மாவும், பட்சிகளின் ஆன்மாவும் சேர்ந்துகொண்டு செய்யும் அதகளமும், அதற்கு உறுதுணையாக இருந்த கிராஃபிக் காட்சிகளும் ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ வகை. கண்டெய்னர் லாரியை பிய்த்துக் கொண்டு, சாரை சாரையாக கைப்பேசிகள் சுவரேறி குதித்து பழிவாங்குவது; வாயில் புகுந்து கொல்வது என சங்கரின் ஒட்டுமொத்த கற்பனைக்கும் அசத்தலான முப்பரிமாண வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போதுமே எந்திரம்போல் வந்து போய்க்கொண்டிருக்கும் எமி ஜாக்சன் எந்திரமாகவே இங்கு அசத்தியுள்ளார். இந்த நிலா பொம்மை, இங்குள்ள மக்களைப் புரிந்து கொள்ள சினிமா, டிவி, சாப்பாடு மற்றும் Gossip பற்றி தெரிந்து கொண்டால் போதுமென்று நம்மை அசரடிக்கிறது.
மேலும் சங்கரைப்போல ரஜினியை ரசிக்கும் இயக்குநர் வேறெவரும் இருக்கமுடியாதென்றே தோன்றுகிறது. சிட்டி, 2.0வைத் தாண்டி வசீகரமான 3.0யையும் ரஜினியாய் உலவவிட்டிருக்கிறார். இந்த குட்டி 3.0 கூடிய விரைவில் அனைத்து பொம்மைக் கடைகளிலும் உலா வரலாம். An Indian brand Toy from Tamil cinema!!! இவர்களிருவரையும் வைத்துக் கொண்டு Holy Crowவாய் நிற்கும் பக்ஷியை துவம்சம் செய்யும் காட்சிகள் கொஞ்சம் அயர்ச்சியைத் தந்தாலும், இதுபோன்ற அறிவியல் மிகைக்கற்பனை (Scince Fantasy) படங்களில் இந்த அம்சங்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு விஷயம் தான்.
இது அறிவியல் புனைவு(Science Fiction) கதையல்ல என்பதை இப்படத்தின் வசனங்களை சங்கரோடு சேர்ந்து எழுதிய எழுத்தாளர் ஜெயமோகன் பின்வருமாறு தெளிவுபடுத்தியுள்ளார்.
அறிவியல்புனைவு என்பதன் விதிகள் மூன்று.
1. அது அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.
2 அறிவியலின் முன்னூகங்களில் [hypothesis] மட்டுமே அது கற்பனையை ஓட்டமுடியும். அதன் நிரூபணவழிமுறை அறிவியல் சார்ந்ததாகவே இருக்கமுடியும்.
3.அறிவியல்புனைவு என்பது வாழ்க்கையின் ஓர் உண்மையை, தத்துவத்தை அறிவியலைத் துணைகொண்டு சொல்வதாகவே இருக்கும். அதன் இலக்கு அறிவியலில் தாக்கம் செலுத்துவதல்ல, வாழ்க்கையை விளக்குவதே.
அறிவியல் மிகுபுனைவுக்கு(Science Fantasy) முதல் இரண்டுவிதிமுறைகளும் இல்லை. அது அறிவியலில் இருந்து குறியீடுகளை, வியப்பும் திகைப்பும் ஊட்டும் கதைகான வாய்ப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. அது ஒருவகை புராணக்கதைதான், அறிவியலை பாவனைசெய்கிறது. அது கேளிக்கையை அளிக்கிறது, கூடவே உருவகங்கள் வழியாகச் சிலவற்றைச் சொல்கிறது. அதன் குறியீட்டுத்தன்மையைக் கொண்டுதான் அதன் அழகியலைக் கணிக்கிறோம்.
ஜுராசிக் பார்க்கில் அத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி அந்த கொசு உயிரோடிருக்க முடியும் என்று அறிவியல்படி கேள்வி எழுப்பினால் அப்படத்திற்குள் நம்மால் செல்லவே முடியாது. பக்ஷிராஷனின் ஆன்மா எப்படி பறவைகளை துணைகொண்டு அரங்கை நிரப்பும் இராஜாளிப் பறவைபோல உருமாறமுடியும் என்று பகுத்தறிவுக்குட்பட்டு கேள்விகளை எழுப்பும்போது நாம் இப்படத்திலும் நுழைய முடிவதில்லை. சிட்டி போன்ற பொறியன்கள்(Robot) சாத்தியமா என்று அறிவியலால் இன்னும் விளக்கமுடியவில்லை. மேலும் பகுத்தறிவின் எல்லைகளை நன்குணர்ந்தவர்களே சிறந்த அறிவியலாளர்களாகவும் இருக்கிறார்கள். இது பகுத்தறிவென்றாலே கடவுள் மறுப்பு என்று சுருக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்து அறிவுஜீவிகளுக்கு புரியப்போவதில்லை.
இவை அனைத்திற்கும் மேலாக இது தமிழ் சினிமா இந்திய சினிமாவிற்கு அளித்துள்ள மிகப்பெரிய கொடை. இது கொண்டாடப்படவேண்டிய தருணமே.