
இப்புத்தகத்தை வாசிக்கையில் இயக்குநர் சங்கரின் எந்திரன் படமும், எழுத்தாளர் ஜெயமோகனால் உருவாக்கப் பட்டிருக்கும் முழுமையறிவு என்ற அமைப்பும் நினைவில் வந்து கொண்டே இருந்தது.
இப்புத்தக ஆசிரியர் சொல்வதைப் போல இப்புத்தகம் நமக்கொரு Unguarded Lion Safari (சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது?) தான். தொலைவிலுள்ள எரிமலைகளை பாதுகாப்பான கண்ணாடி கூண்டுக்குள் இருந்து பார்ப்பதை விட, முடிந்த அளவு அதனருகில் சென்று அதன் தீவிரத்தை உணரவைக்கும் ஒரு முயற்சி இப்புத்தகம் எனலாம். வெம்மையின் தீவிரத்தை உணர்ந்தால், அதிலிருந்து மீள்வதற்கு அல்லது அதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கான வழிகள் புலப்படும் என்ற நிசர்சனத்தையும் இப்புத்தகம் சுட்டிக்காட்ட தவறவில்லை.
About the author
இப்புத்தகம் ஏன் இன்னொரு AI (செயற்கை நுண்ணறிவு) பற்றிய பூச்சாண்டி புத்தகம் என ஒதுக்க முடியாது என்பதற்கு இப்புத்தக ஆசிரியர் பற்றிய இக்குறிப்புகளே போதுமானவை.
https://www.imperial.ac.uk/people/david.shrier
இதுவரை AI பற்றி சொல்லப்பட்டவை எல்லாம் பூச்சாண்டிகளாகவே இருந்து விடப் போவதில்லை என்பதை ChatGpt ஓரளவு நிரூபித்திருக்கிறது. அதற்குப் பின்புதான் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் Trusted AI என்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர் என்பது சுவாரஸ்யமூட்டுகிறது. கிட்டத்தட்ட வங்கிகளைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இது போன்று சிறிய அமைப்புகளாகத் தான் தோன்றியிருக்க முடியும். நாளடைவில் வங்கிகள் சமூகத்தின் பிரிக்க முடியாத அங்கமாக மாறியவுடன் RBI போன்ற பெரும் அரசு அமைப்புகளாக இச்சிறு அமைப்புகள் உருமாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்திருக்கும். Trusted AI போன்ற அமைப்புகளும் இதுபோன்று உருமாறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே தோன்றுகிறது.
AI to AGI
AIஐத் தாண்டி இப்புத்தகத்தில் பேசப்படும் AGI (Artificial General Intelligence) நமக்கு அச்சத்தையும் ஈர்ப்பையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது. AI தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு Chatbot, தொடர்ந்து கற்றுகொண்டு ஒரு எந்திரனாக, இறுதியில் மனித எந்திரனாக பரிணமிக்கும் பொழுது அதனை இயக்கும் தொழில்நுட்பம் AGI என்றழைக்கப்படுகிறது என்ற புரிதலுக்கு இப்புத்தகம் இட்டுச் செல்லுகிறது. ஆனால், AGI இப்போதைக்கு(இன்னும் நூறாண்டுகளுக்காவது), சாத்தியமில்லை என்றாலும் ChatGptஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதை மறுக்கிறது. நாங்கள் ஏற்கனவே, AGIஐ சாத்தியமாக்கி விட்டோம் என்றும், இன்னமும் அந்த மேம்படுத்தப்பட்ட ChatGptஐ வெளியிடவில்லை என்றும் பீதியூட்டுகிறது.
Human Interface for Robot
இந்த AGIஐதான் சங்கரின் எந்திரனை ஞாபகப்படுத்தியது. நமக்கு கற்பிக்கப்படாத அல்லது அறியாத ஒன்றை எதிர்கொள்ளும் போது மனிதர்கள் என்ன செய்வார்களோ அதையே எந்திரனும் நகலெடுப்பது தான் AI AGI ஆவதற்கான தொடக்கப் புள்ளி எனலாம். அதாவது எந்திரன் மனித எந்திரனாக மாறுவதற்கான முதல்படி. நம் நினைவுகள் அல்லது அனுபவங்கள் போதாமையாக இருக்கும் இதுபோன்ற சமயங்களில் Googleஐ அல்லது நமக்குத் தெரிந்த நண்பர்களை, நிபுணர்களை நாம் அணுகுவது எந்திரனுக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இது Machine Learning என்பதையும் தாண்டி மனிதனைப் போல் எப்படி சிந்திப்பது என்பதற்கு இட்டுச் செல்கிறது. மனிதனுடைய இந்த சமிக்ஞைகளை எப்படி எந்திரனை உணரவைப்பது என்பது தான் மிகப் பெரிய சவால். AI ன் அடுத்த கட்ட வளர்ச்சியான இதனை Human Interface for Robot என்கிறது இப்புத்தகம். இந்த interfaceஐ வடிவமைப்பவர்களுக்கான தேவை வரும் காலங்களில் அதிகமாக இருக்கும் என்கிறது இப்புத்தகம்.
Brain Implant
இப்புத்தகம் குறிப்பிடும் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், Brain Implant. நமக்குத் தெரியாத ஆனால் தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ள Googleல் முதலில் type செய்தோம். பிறகு, voice வழியாக. ஆனால், Brain implant நம்மிடம் இருக்கும் பட்சத்தில் நாம் நினைத்தாலே போதும். Googleல் அல்லது வேறு ஏதாவது ஒரு வழியில் அதுவாகவே Brain implant தேடிக் கொடுத்து விடலாம். மனித உணர்வுகளை அல்லது தேவைகளை புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப்படும் இந்த Brain Implant தான் AI, AGIயாக மாறுவதற்கான முதல் படியாகவும் இருக்கலாம். ஏற்கனவே சமூக ஊடகங்களால் நமது தேவைகளும் விருப்பங்களும் கட்டமைக்கப்படுவதை சுட்டிக்காட்டும் இப்புத்தகம், unbiased Brain Implantஐ வடிவமைப்பதின் சிக்கல்களையும் சுட்டிக் காண்பிக்கிறது. இதனையும், பிரசித்தி பெறப்போகும் Human Interface Design For Robot துறை எனலாம். இது சாத்தியமாகும் வரை, ChatGpt பிரபலமாகவே இருக்கும்.
Prompt Engineering
ChatGpt யிடம் இருந்து மிகத்துல்லியமான தகவல்களைப் பெற உதவும் இன்னொரு துறையாக Prompt Engineering என்ற துறையை இப்புத்தகம் சுட்டிக் காண்பிக்கிறது. எனக்கு ChatGpt பற்றி ஒரு கவிதை வேண்டும் என்று ChatGptயிடம் கேட்கப்படும் கேள்வியை Prompt Engineer தான் வடிவமைத்த Interface வழியாக இடைமறித்து நம்மிடம் பின்வரும் கேள்விகளைக் கேட்கலாம்.
- கவிதை எத்தனை வரிகளில் இருக்க வேண்டும்?
- கவிதை யார் எழுதியது போல் இருக்க வேண்டும்?
இதற்கான பதிலைப் பெற்றுக்கொண்ட பின், “30 வார்த்தைகளில் கவிஞர் தேவதேவன் எழுதியது போல் ChatGpt பற்றிய ஒரு கவிதை வேண்டும்” என்று நம்முடைய கேள்வியை Prompt Engineerகளால் வடிவமைக்கப்பட்ட Interface மேம்படுத்தி ChatGptக்கு அளிக்கும். “மனுஷா, சுயமறியா உன்னை கடைசிவரை அதனை அறிய விடமாட்டேன் நான்” என்ற கவிதையை ChatGpt அளிக்கலாம்.
AIஐ விட சற்று மேம்படுத்தப்பட்ட GenerativeAI தொழில்நுட்பத்தில் இயங்கும் ChatGpt மனித உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளும் AGIயாக மாறும் வரை Prompt Engineering பிரபலமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத இப்புத்தகம், AI ஊடுருவாத துறையே இருக்க முடியாது என்கிறது. ஒவ்வொரு துறையிலும், 40 முதல் 50% வரை மனிதனின் தேவையை குறைக்கும் என்கிறது. அதற்கான தரவுகளையும் சுட்டிக் காண்பிக்கிறது. AIஐ எதிர்ப்பது விட அதை நமக்குச் சாதகமாக எப்படி பயன்படுத்துவது என்பதையும் விரிவாக இப்புத்தகம் விளக்குகிறது. Analytical and Quantitative Skillsஐ விட, Emotional Intelligence, கற்பனை மற்றும் Softskills தான் AI யுகத்தில் மனிதர்களுக்கு தேவைப்படும் என்கிறது. மிக ஆச்சரியமாக தத்துவக் கல்வியின் தேவையையும் இப்புத்தகம் சுட்டிக் காண்பிக்கிறது. இது தான் எழுத்தாளர் ஜெயமோகன் உருவாக்கியிருக்கும் முழுமையறிவு (https://unifiedwisdom.today/) என்ற அமைப்பை இப்புத்தக வாசிப்பு நினைவுபடுத்தக் காரணம். Time to Augument our Formal education with such organisations?