https://muthusitharal.wordpress.com/2017/12/20/உழைப்பின்-கொண்டாட்டம்-part-1/?preview=true
தொடர்ச்சி….
மதிய உணவு முடித்து அடுத்த நிகழ்வுக்கான இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்ததும் தான் அந்த resortன் பசுமையும் பிரமாண்டமும் ஆச்சரியப்பட வைத்தன. நிறைய பேர் அதில் மயங்கி உறைந்து நின்று கொண்டிருந்தார்கள் தங்கள் கைபேசியின் முன். அவர்களுக்கான புதிய முகப்பு புகைப்படம் (profile picture) தயாராகிக் கொண்டிருந்தது.
மிக நேர்த்தியாக பேணப்பட்டிருந்தது அங்கிருந்த பசுமை. ஆனால், சூழலியளாலர்களை (environmentalist) கேட்டால், ஏற்கனவே அங்கிருந்த பசுமையை சிதைத்துத் தான் இந்த resortஏ எழுப்பப்பட்டுள்ளது என்பார்கள் வழக்கம்போல.
கொஞ்சம் சரிவான பாதையில் மேலேறி கடல் போல் மிகப்பரந்திருந்த அந்த புல்வெளிப்பரப்பை அடைந்தோம். ஆழியின் (கடல்) பெரிய அலையொன்றை உறையவைத்தது போல் சற்று மேலெழும்பி, பிறகு கீழறங்கி மறுபடியும் மேலெழும்பி என ஒரு வடிவமற்ற வடிவமாய் (shapeless shape) இருந்தது அப்புல்வெளி. உள்ளிருந்த குழந்தை மனம் மீண்டும் முழித்துக்கொண்டது. புல்வெளியில் மல்லாந்து படுத்து வானத்தை ரசிக்க ஆரம்பித்தது ஒரு கூட்டம். நீல வானத்தின் நிர்மால்ய ( ஆடையற்ற) தரிசனத்தை வெண்மேகங்கள் ஆடையென மறைக்க முயன்றிருந்தன. அதன் வழியாக ஊடுருவிய சூரியக் கதிர்கள் அவ்வளவாக சுட்டெரிக்கவில்லை. அப்போது தான் நினைவுக்கு வந்தது அது ஒரு முன்பனிக்கால மார்கழி மாதத்து வெயிலென. மேலும் குதுகூலமடைந்து புல்தரையில் புரள ஆரம்பித்தது அந்தக் கூட்டம். நாகரிகம் என்ற பெயரில் நாம் தொலைத்த ஆதி மனிதனின் மனநிலையது.
சற்று தூரத்தில் ஒரு கூட்டம் பூமியின் ஈர்ப்பு விசைக்கு சவால் விட்டுக் கொண்டிருந்தது. அப்புல்வெளிப் பரப்பின் விளிம்புகளில் இருந்து கீழிருந்த சரிவுப்பாதை நோக்கி குதித்து கொண்டிருந்தார்கள். குதிக்க குதிக்க அவர்களை கீழே இழுத்து போட்டுக் கொண்டிருந்தது பூமி, “யாருக்கிட்ட?” என. இக்கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் பெண்களே. இவர்களுக்குத் தான் எவ்வளவு ஆசை, சிறகு முளைத்து பறவை போல் வானத்தில் பறந்து விட மாட்டோமா என்று. இன்னும் இந்த பூமி ஆண்களுக்கு இணக்கமானது போல் பெண்களுக்கு இல்லை போலும் என ஒரு பெண்ணியவாதி போல் எண்ண ஆரம்பித்தேன்.
இப்படி கூட்டம் கூட்டமாக இயற்கையோடு ஒன்றியிருந்தவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு மீண்டும் அரவிந்தின் தலையில் விழுந்தது. இதெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியென்று மீண்டும் ஒரு விளையாட்டுக்குள் அனைவரையும் இழுத்துக் கொண்டார். ஒரு குட்டி தலையணையை காலிடுக்கிற்குள் வைத்துக்கொண்டு , பெரிய வட்டத்திலிருக்கும் அடுத்தவருக்கு கடத்தவேண்டும். கடல் குதிரை நடப்பது(நீந்துவது) போலிருந்தது ஒவ்வொருவரும் காலிடுக்கில் தலையணையை வைத்துக் கொண்டு நடந்தது. உண்ட மயக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய ஆரம்பித்தது. மணி 3ஐ தொட்டுக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தான் உள்ளது என குடிகார குப்பண்ணன் உற்சாகமடைய ஆரம்பித்தார்.
வெண்மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இருள ஆரம்பித்தன. கதிரவன் முற்றிலும் மறைந்து விடைபெற்றுக் கொண்டிருந்தான். சூல் கொண்டிருந்த (கருத்தரித்திருந்த) கரு மேகங்களின் குழந்தையென ஓரிரு மழைத்துளிகள் வேறு. கிட்டத்தட்ட ஒரு கவிஞனின் மனநிலைக்கு என்னை இட்டுச் சென்றிருந்தது அந்த ரம்மியமான அந்திப்பொழுது. அங்கிருந்த அனைவருமே மழையைக் கண்டு அஞ்சுவது போல் தெரியவில்லை. இருகரம் விரித்து வரவேற்கவும் தயாராயிருந்தார்கள். நாயகன் படத்தின் “அந்தி மழை மேகம்….தங்க மழை தூவும் திருநாளாம்…” என்ற பாடலின் கொண்டாட்டம் மனதில் நிழலாடியது.
மீதமிருக்கும் ஒரு மணி நேரத்தில் நடந்தவை 4மணிக்கு மேல் என்ன நடக்கும் என்பதற்கான முன்னோட்டம் போல் இருந்தது. பாம்பேயின் ‘கண்ணாளனே…’ என்று உருகிய அந்தக் குரல், அதைத்தொடர்ந்த சிறிய குத்தாட்டம் மற்றும் மேடை நடை (ramp walk) என 4 மணியை கடந்திருந்தோம். நேரத்தை விரயம் செய்யாமல் எங்கள் பிரிவின் பெரிய தலை உமா தனது நன்றியுரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். அங்கிருந்த அனைவருக்கும் கம்பெனியின் சின்னம் பொறித்த தோள் பையொன்று நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த இடைப்பட்ட நேரத்தில் resortன் சீருடை அணிந்த சிப்பந்திகள் எங்களை ஆடவைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தார்கள். புல்வெளியின் நடுப்பகுதியில் கனமான சிறு சிறு சதுரங்களைச் சேர்த்து பெரிய சதுரமாக செயற்கையான ஆட்டத் தளம், அதை உயிர்ப்பிக்கும் DJ நிபுணர்கள் மற்றும் முக்கியமாக அதிலேறி ஆடத்தூண்டும் மது எனும் வஸ்து என அனைத்தும் தயார்.
Open the bottle machi…..
இதற்குப்பின் அந்த பரந்த புல்வெளியில் கருமேகங்கள் சூழ அங்கு நடந்தவை எல்லாம் அலாதியானவை. குறிப்பாக அந்த ஆட்ட தளத்தில் (dance floor) நிரோஷாவால் பிள்ளையார் சுழி போடப்பட்ட உடம்பின் புதிய எல்லைகளை உணரவைக்கும் அல்லது அவ்வெல்லைகளை மறுவரையறை (redefining the boundaries) செய்யும் அந்த ஆட்டம், இன்னொரு நிபுணர் எங்களிடையே இருந்ததை உணரச்செய்தது.
இசையும், மதுவும் தொடர்ந்து வஞ்சனையின்றி பரிமாறப்பட்டுக் கொண்டே இருந்தது. இரண்டும் தந்த மயக்கம் கால்கள் பின்ன, ஒட்டு மொத்த உடம்பும் ஊஞ்சலாக ஆட ஆரம்பித்தது. கூடவே சேர்ந்து அந்த பரந்த புல்வெளியும் ஆட ஆரம்பித்தது போலிருந்தது. அங்கிருந்த அத்தனைபேரும் ஒரு பரவச நிலையில் இருப்பது போல் தான் தோன்றியது. அப்பரவசம் உச்சம் தொட்டு உக்கிரமான போது முற்றும் விரிந்த பெரிய விழிகளைக் கொண்ட சில காளிகளையும், நாக்கை மடக்கி கடித்த அய்யனார்களையும் கண்டு மனம் பயந்தது.
இதை உணர்ந்து கொண்ட புத்திசாலி DJ வழக்கம்போல் அந்த என்றும் இளமையான சகலகலா வல்லவனின் ‘இளமை இதோ…இதோ…’ வைப் போட்டு அனைவரையும் தரையிறக்கி விடை பெற்றார்.
மணி இரவு 8.30. முகத்தில் அறைந்த குளிர் காற்று மயங்கியிருந்த எனக்கு Tempoவில் திரும்ப சென்று கொண்டிருப்பதை உணர்த்தியது. அந்த மயக்கத்திலும் மீண் டுமொரு முறை இந்நிகழ்வை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மனதில் நன்றி கூறிக்கொண்டிருந்த என் மேல் ஒரு ஆஃபாயிலை போட்டு தெளியவைத்தார் பக்கத்திலிருந்த அந்த புண்ணியவான்.
மீண்டுமொரு நிகழ்வில் சந்திப்போம்…..
Expected more story about after 4Pm activities ;)… (Neer Virinthu patri)
Mikka Sirappu… Meendum Matroru Nigalvin (Oru Naal Koothu) Surukuthai viraivil ethripathu kondu irukiren…
Ippadiku:
Koottathil Oruvan…:)
LikeLike
Ha..ha…
LikeLike