கிராதம் – On the job Training for Arjuna

பெருச்சாளியைக் கொன்று அதை நெருப்பில் வாட்டி அதன் அடிவயிற்றிலிருந்த ஊனை எடுத்துண்ணுகிற; உடல்முழுதும் வெண்சாம்பல் பூசி எலித்தோலை மட்டுமே ஆடையென இடையிலணிந்திருந்த அவரை, “வீணனே நீயென்ன காட்டுமிராண்டியா?” என்று குதிரையிலமர்ந்தவாறே   அருவருப்போடு நோக்கினான் அவ்வழியே வந்த அந்த பண்பட்ட இளவரசன். “உண்பதும் உணவே” என்ற சின்ன புன்னகையோடு அவ்விளவரசனை நோக்கிவிட்டு அவ்வூனைச் சுவைக்க ஆரம்பிக்கிறார். 

சற்று நேரத்திற்கெல்லாம் அவருடைய ஒருபுறக்காது இரத்தம் சொட்டும் கேள்விக்குறியாய் அவர்முன் வந்து விழுந்தது. கையில் தன்னிடையிலிருந்து உருவி அவர் காதை வெட்டியெறிந்த வாளுடன் ஆக்ரோசமாக, “வீணனே உண்ணும் நீயும் உணவென்றாயே,  எங்கே இந்தக் காதையும் உண் பார்க்கலாம் “ என்கிறான். அதே புன்னகையுடன் தன்காதையும் சுவைக்க ஆரம்பிக்கிறார் அந்த வெண் சாம்பலாடையார், ‘சிவமேயாம்’ என்ற உரத்த குரலோடு. அந்த இளவரசன் மட்டும் விக்கித்துப் போவதில்லை. ‘கிராதத்தில்’ எழும் இந்தப்புனைவைப் படிக்கும் நாமும்தான். 

இந்தப்புள்ளியில் இ்ருந்தே ‘கிராதம்’ பற்றிய என்னுடைய அவதானிப்பான விளிம்பும் மையமும் ஒரு வட்டத்தின் இருவேறு பகுதிகள்தானேயொழிய, முற்றிலும் வேறான இருவடிவங்களல்ல என்ற கருத்தாக்கம் கருக்கொள்கிறது. அர்ஜுனனை தன்னுயிர் நண்பனாக கருதிய கிருஷ்ணரும்; அதே நண்பனை மனைவியின் மானம்காக்கத் தவறிய பேடி என்று வெறுத்தொதுக்கும் கிருஷ்ணரும் இருவேறு மனிதர்களல்ல. பெருச்சாளியின் ஊனை, தன் ஊனென சுவைக்கும் யோகிகளால் நிரம்பி வழிகிறது அர்ஜுனனின் மெய்மைத் தேடலை விவரிக்கும் ‘கிராதம்’ என்ற இந்நாவல்.

 தருமனின் அறச்சிக்கல்களை விவரிக்கும் ‘சொல்வளர் காடு’ நாவலை உபநிடதங்களை மாலையாக கோர்த்துக்கொண்ட ஒரு பிரம்மசூத்திரமாகத்தான் நான் உருவகித்துக் கொண்டேன். அதுபோல, கெடுமணத்தால் ஆட்கொள்ளப்பட்ட கிருஷ்ணனால் சீண்டப்பட்டு  தன்னைக் கண்டடைய மேற்கொள்ளும் அர்ஜுனனின் இப்பயண நாவலை ஒரு சைவசித்தாந்தமாகவே உருவகிக்க விழைகிறேன்.

தர்மனின் பயணம் (சொல்வளர்காடு) ‘அது’ எதுவென்று அறிய விழைவதால் விளையும் ஒரு வகையான anxietyயால் நிரம்பியிருந்தது என்றால், அர்ஜுனனின் பயணம் (கிராதம்) ‘அது’ என்ன என்னைவிட…அதையும்தான் பார்த்துவிடுகிறேன் என்பதாய் இருக்கிறது. தர்மன் பயணத்தின் முடிவில் ஞானியாகிறானென்றால்; அர்ஜுனன் யோகியாகிறான்.

கர்மபந்தம் 

மிகவும் ஈர்த்து என்னை உள்வாங்கிக்கொண்டச் சொல்லிது. ரத்தபந்தத்தைவிட, தான் அடைவதற்கரிய தன்னைவிட பெரிய இலக்குகளை இலட்சிய கனவாகக் கொண்டவர்களுக்கு, அச்செயலின் பொருட்டு இணையும் கர்மபந்தமே மிகவும் பொருட்படுத்தக்கூடிய பிணைப்பாக இருக்க முடியுமென்று அர்ஜுனன் கிருஷ்ணர் நட்பை விளக்க முயல்கிறது இச்சொல். 

பெருங்கனவுகளை துரத்தி அடைந்த ஒவ்வொரு அர்ஜுனர்களுக்கும் பின்னால் கிருஷ்ணர் போன்ற நண்பர்களின் உழைப்பும் சீண்டலும் தூண்டலும் இருந்திருக்கும்.  அந்தச் சீண்டலின் விளைவே அர்ஜுனனை நான்கு திசைகளின் தெய்வங்களையும் வென்றறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இந்த வேட்கையின் பொருட்டு அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணமே ‘கிராதம்’ எனும் நாவலாக வெகு பிரமாண்டமாய் இப்பிரபஞ்சத்தை நம்முன் விரித்து, அதன்முன் நம்மை ஒரு துளியென நிறுத்துகிறது.

நான்கு திசைப்பயணம்

கிடைப்பதற்கரிய படைக்கலன்களை பெறுவதற்காக அடைவதற்கரிய நான்கு திசை தெய்வங்களின் இருப்பிடங்களை நோக்கி அர்ஜுனன் மேற்கொள்ளும் பயணங்களை, எவ்வளவு கற்றிருந்தாலும் தன்னை நிரம்பி வழியாமல் வைத்துக் கொண்ட சண்டன் என்ற சூதன் சொல்வதாக பயணிக்கிறது இந்நாவல். பல்வேறு குருநிலைகளில் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த நான்கு அந்தண இளைஞர்களும் சண்டனோடு பயணிக்கிறார்கள்.  நிரம்பி பொங்கிக் கொண்டிருந்த அவர்களின் கற்றறிந்த வேதமெய்மையை வழிந்தோட வைத்து அவர்களுடைய கலன்களை வெறுமையாக்கி ‘கற்றது கைமண் அளவே’ என்று தன் சூத ஞானத்தால் உணர்த்துகிறார் சண்டன்.

தெற்கில் யமனையும், வடக்கில் குபேரனையும், மேற்கில் வருணணையும், கிழக்கில் சூரியனோடு உறவுகொண்டு பாலியைப் (வாலியின் மறு அவதாரம்) பெற்றதால் அத்திசையின் தெய்வமாக தன்னை நிறுவிக்கொண்ட இந்திரனையும் சந்தித்து அவர்களுடைய அஸ்திரங்களை பெறுகிறான் அர்ஜுனன். இந்நான்கு திசைத் தெய்வங்களை வெல்வதைவிட, அவர்களிருக்கும் இடத்தை அடைவதற்கான பயணம்தான் அர்ஜுனனுக்கு பெருந்துயர்களையும் இடர்களையும் தருவதாக உள்ளது. பயணத்தால் உளம் செம்மைப்பட்ட பிறகு, அதன் வழி அடையும் இலக்குகள் நம்மை ஆச்சரியப்பட வைப்பதில்லை.  பயணங்கள் தனதானவையாக இருக்கும்போது, பயணந்தோறும் இலக்குகள் தான் என்பதை அர்ஜுனனின் இந்த நான்கு திசை பயணங்களும் உணர்த்துகின்றன. 

மேலும் இந்த நான்கு திசைகளின் நிலப்பரப்புகளும், வான்பரப்புகளும் சித்தரிக்கப்படும் விதம் நம்மை அப்பரப்புகளின் உள்ளேயே தூக்கி போட்டு விடுகிறது. அதிலும் குறிப்பாக இந்திரலோகத்தின் சாளரங்கள் வழியாக அர்ஜுனன் காணும் பனியருவி கொட்டிக் கொண்டிருக்கும் மேகமலைகள் போன்ற சித்தரிப்புகள் கற்பனாவாதத்தின் காலமற்ற தன்மை என்றே எண்ண வைக்கிறது. நோக்கித் தீர்வதில்லை இந்திர தேசத்தின் அழகு என்ற ஊர்வசியின் வார்த்தைகள் ஆழமானவை. நாம் காண நினைப்பதையே அங்கு காண்கிறோம். இங்கு காண்பவையெல்லாம் நம் அகத்தின் பிரதிபலிப்புதான் என்றுணரும்போது, சொல்லெனும் தேகம் பொருளெனும் ஆடையைத் துறந்து நிர்வாணமடையும் நிலையைப் பெறுகிறான் அர்ஜூனன். இந்திரம் கருத்துமுதல்வாதத்தின் நிலம் என்பதை உணரமுடிகிறது.

மகாவஜ்ரம் – இந்திரனில் உறைந்திருக்கும் அசுரன்

  1. கரிபிளந்தெழல்
  2. திசைச்சூழ் செலவு
  3. பொருள்கோள் பாதை
  4. மகாவாருணம்
  5. மாகேந்திரம்
  6. மகாவஜ்ரம்
  7. பாசுபதம்

என ஏழு பகுதிகளாக விரிந்து செல்லும் இந்நாவலின் ஐந்தாவது பகுதியான மகாவஜ்ரத்தில் நுழையும் போதே, வேதங்களின் தோற்றமும், அதன் பரிணாம வளர்ச்சியில் அடிப்படையில் அமைந்த அரசியலையும் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. 

அசுர வளர்ச்சி தீராத விழைவின்றி சாத்தியமில்லை. இப்பூமியில் தோன்றி, அதை வளர்த்தெடுத்த முதல் மனிதகுலம் பிரஜாபதிகளில் ஒருவரனான கசியபருக்கும் நாகதெய்வங்களும் பிறந்த அசுரர்களே. மாநாகத்திலிருந்து இப்படித்தான் அசுர வேதம் தழைத்தோங்கி எழுகிறது. இவர்களின் அசுர வளர்ச்சியை கட்டுப்படுத்தவே சில அறக்கோட்பாடுகளான பகிர்ந்தளித்தல், உபகாரம், நிவேதனம் என்பவை அசுரர்களாலேயே வரையறுக்கப்படுகின்றன. சமகாலத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்சினையான சுற்றுச்சூழல் அழிவுக்கு எதிராகவும் இந்த அறக்கோட்பாடுகள் ‘ருதம்’ என்றும் பேசியிருக்கின்றன என்பது ஆச்சரியத்தையும் உவகையும் ஒருசேர அளிக்கிறது. 

இந்த அறக்கோட்பாடுகளுக்கு செவிசாய்த்த அசுரர்கள் தேவர்களாக எழுகிறார்கள். அவர்களுக்கு முதன்மையானவராக இந்திரன் ஆகிறார். அசுரர்களின் வேதத்திலிருந்து எழுந்த மாகேந்திரத்தின் துணையுடன் இவ்வுலகின் அவியனைத்தையும் பெற்று கொழிக்கிறது இந்திரனின் நிலம். அவரைத் தொடர்ந்து மேற்குதிசை தெய்வமான வருணணின் குலத்திலெழுந்த  மகாவருண வேதத்தின் துணையுடன் விருத்திரன் இந்திரப்பதவியை எடுத்துக் கொள்கிறான். ஆனால் இந்திரனுள் இருக்கும் அசுரன், விருத்திரனை வருணனின் துணைகொண்டு வென்று மீண்டும் இந்திரப்பதவியை தக்கவைத்துக் கொள்கிறான். மீண்டும் வேள்விகளின் அவி இந்திரனுக்கே உரியதாகிறது.

இந்திரப்பதவி என்பது அவ்வளவு எளிதாக தக்கவைத்துக் கொள்ளக்கூடிய ஒன்றல்ல போலும். ஹிரண்யனின் வழியாக மகாநாராயண வேதம் எழுந்து வருகிறது. அதையும் சூரியனின் துணைகொண்டு வென்றெடுத்து மகாவஜ்ரமெனும் வேதத்துடன் தன் அவியை மீண்டும் உறுதி செய்து கொள்கிறான் இந்திரன். என்னதான் அறக்கோட்பாடுகளை கடைபிடித்தாலும் இந்திரனை இயக்குவது, அவனுள் உறைந்திருக்கும் விழைவொன்றே கர்மமென கொண்டிருக்கும் ஆசுரமே. இவ்விழைவிலெழும் செயலூக்கமே தொல்வேதத்தை மாநாகத்திலிருந்து ஆசுரம், மாகேந்திரம், மகாவாருணம், மகாருத்ரம் மற்றும் மகாவஜ்ரம் என பரிணமிக்கச் செய்திருக்கிறது. 

கிருஷ்ணன் – இந்திரனின் பார்வையில்

இந்திரப்பதவிக்கான போட்டி அடுத்து கிருஷ்ணனின் ரூபத்தில் எழுந்து வருகிறது. அதிலும் தன் மைந்தனே தனக்கு எதிராக திரும்பியிருப்பதில் அயர்ச்சி கொள்கிறான் இந்திரன். இது களியாட்டு கரியோனின் சதிதான் என்பதை அர்ஜுனனுக்கு உணர்த்த மாலி, பாலி மற்றும் ஊர்வசி வழியாக இந்திரன் எடுத்த அனைத்து முயற்சிகளும் அவர்களிருவரின் நட்பிற்குமுன் தோல்வியிலேயே முடிகின்றன. இவ்வுலகை வெல்லும் சொல் அவனிடம் உள்ளது. உன்னிடம் உள்ள வில்லுக்காகத்தான் உன்னை இந்த நான்கு திசைப் பயணத்திற்கு தூண்டியுள்ளான் என்ற சொற்களுக்கு அர்ஜூனனின் சிந்தை செவிமடுக்கவில்லை.

குறிப்பாக இந்திரனுக்கும் சூரியனுக்கும் பிறந்த வாலியின் மறுபிறவியான பாலியின் சகோதரப்பாசம், முன் பிறவியில் கரிய சான்றோனிடம் சுக்ரீவன் கொண்ட நட்பிடம் தோற்றதைப்போலவே இப்பிறவியில் களியாட்டு கரியோனிடம் அர்ஜூனன் கொண்ட நட்பிடம் தோற்றுப் போகிறது. விதியின்முன் காலம்கூட தோற்றுத்தான் போகிறது. 

அர்ஜூனனுக்கும் ஊர்வசிக்கும் இடையே நடக்கும் களியாட்டு உரையாடல்கள் மகாவஜ்ரப்பகுதியின் உச்சம் எனலாம். அர்ஜூனனின் ஆணவ முள்ளைத் தொட்டெழுப்பி தன்னை நிறைத்துக் கொள்ள விழைகிறாள் ஊர்வசி. தன்னுடைய அழகு, அறிவு, ஆற்றல் என எல்லாவற்றையும் இதன்பொருட்டே செலவிடும் ஊர்வசி முன் அர்ஜுனன் துரும்பாகவே நமக்குத் தெரிகிறான். தன்னுடைய ஆணவத்தை மறுவார்ப்பு எடுத்து வைத்திருக்கும் ஊர்வசியிடம் கலந்தபின் தன்னிடம் எதுவும் எஞ்சப்போவதில்லை என்பதை உள்ளுணர்ந்து கொண்டு அவளிடமிருந்து விலகுகிறான். தன்னுடைய நிறைவை கிருஷ்ணனுக்காக தவிர்க்கிறான் அல்லது தள்ளிப்போடுகிறான். இந்திரனின் கடைசி முயற்சியும் தோற்கிறது. துளியளவும் எஞ்சாத எதுவும் மீண்டும் துளிர்ப்பதில்லை என்பதை உணர்ந்த அவன் இன்னமும் தன்னுள் எஞ்சியிருக்கும் காமத்துடனும் வேட்கையுடனும் மகாவஜ்ர அஸ்திரத்தை பெற்றுக் கொண்டு இந்திரபுரியிலிருந்து மீண்டு தன் நான்கு திசை பயணத்தை நிறைவு செய்கிறான்.

நாவல் முடிந்து விட்டது என்று நினைக்கையில் பாசுபதத்தை தன்னுள் அடக்கிய கடைசிப் பகுதியின் பக்கங்கள் காற்றில் படபடத்தன. அதிலுள்ள மீறும் பார்வதியும், அடக்கும் காளியும் அர்ஜுனனை நோக்கி உன்னுடைய சிந்தனைக்கும் செயலுக்கும் உள்ள இடைவெளி குறையாத வரை உன்னுடைய இந்தப்பயணம்  முடியப்போவதில்லை என்று கண் சிமிட்டுகிறார்கள்.

பாசுபதம் – சி செ ந் ல் னை

தன்னுடைய நான்கு ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை கின்னரஜயன்கள் என்ற மக்களின் வழியாக அர்ஜுனனுக்கு கிடைக்கிறது. கட்டுப்பாடுகள் மிகுந்த அக்குலத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்ணின் மீறலால் சீண்டப்பட்டு அவளுடன் கலக்கிறான் அர்ஜூனன். ஊரணநாபன் என்ற தங்களுடைய தொல்குலத் தெய்வத்தால் சிலந்தி வலைபோல பின்னப்பட்டிருந்தது இக்குலம். தான் என்ற தன்னுணர்வற்று ஒட்டு மொத்த குலமும் ஒன்றாய் பின்னப்பட்டிருந்தார்கள். வலை அறுபடும் போதெல்லாம் மீதியிருப்பவர்களை இணைத்துக் கொண்டு புதிய வலையை உருவாக்கும் சிலந்திகளைப் போல தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். கிட்டத்தட்ட சிட்டி 2.0 தான் கலைக்கப்படும் போதெல்லாம் தான் உருவாக்கிய மீதமுள்ளவர்களை இணைத்துக் கொண்டு இன்னொரு உருவத்தைப் பெறுவதுதான் நினைவுக்கு வந்தது. ஊரணநாபனை சிட்டி 2.0 என்றே எண்ணத் தோன்றியது. 

ஒரு கட்டத்தில் கின்னரர்கள் வழியாக தன்னுணர்வை அடையும் இக்குலமக்கள் தங்களை மீண்டும் சிலந்தி வலையாகப் பின்னிக் கொள்வதன் தேவையிலிருந்து விடுபட்டு கின்னரஜயன்கள் ஆகிறார்கள். ஆனால் கண்களுக்குப் புலப்படாத அதீதக் குலக்கட்டுப்பாடுகள் அக்குல மக்களை, குறிப்பாக பெண்களை, சிலந்தி வலையாய் சூழ்ந்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளெல்லாம் மரங்களின் கிளைகளை வேண்டுமானால் கட்டுப்படுத்தலாமேயொழிய வேர்களையல்ல. வேர்கள் மரத்தை முற்றுணர்ந்தவை. முற்றுணரும்போது இயல்பாகவே மீறுவதற்கான தகுதியும் அதற்குத் தேவையான வலிமையும் நம்முள் குடிபுகுகிறது. பெண்கள் எப்போதும் இப்பிரபஞ்ச மரத்தின் வேர்கள். சர்வ கல்விதமாமேகம் நான்யஸ்தி சனாதனம் (இங்குள்ள அனைத்தும் நானே, நானன்றி தொடக்கமென்று எதுவுமில்லை). 

இதை உணர்ந்ததால்தான் பெண்கள் மேல் அதீதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன போலும். ஆனால் அவற்றை எப்போதும் மீறும் பெண்களில் ஒருத்தியாக கின்னரஜயன்களிடமிருந்து பார்வதி எழுந்து வருகிறாள். தங்கள் குலத்தாரோடு வணிகம் செய்ய வந்தவர்களுக்கு காவலனாக வந்த அர்ஜூனனால் ஈர்க்கப்பட்டு அவனை அடைகிறாள். அர்ஜுனனின் வீரத்தை அறிந்து கொண்ட அக்குலத்தலைவர்கள் அவனை தங்களால் தண்டிக்கமுடியாது என்பதை உணர்கிறார்கள். அவர்களுடைய குலக்குருவின் அறிவுரைப்படி அவர்களை ஆளும் கின்னரர்களிடம் அர்ஜுன் அனுப்பப்படுகிறான்.  தொடர் பயிற்சிகள் மற்றும் பயணங்கள் வழியாக அவனுடைய அகம் கூர்மை கொண்டிருப்பதை, அர்ஜூனனினுடைய கைகளின் தொடர்ச்சி போலிருக்கும் வில்லில் இருந்து வரும் அம்புகள் கின்னரர்களுக்கு உணர்த்துகின்றன. இவனைத் தண்டிக்க தங்களுடைய தெய்வங்களாலே முடியும் என்று கின்னரர்கள், தங்களுடைய தெய்வங்களை கொண்டிருக்கும் அந்த குகைக்குள் அர்ஜுனனை அனுமதிக்கிறார்கள்.

குகைக்குள் தான் போரில் சந்திக்கவிருக்கும் பீஷ்மர்,கர்ணன் என அனைவரும் தெய்வங்களாக எழுந்து தன்னை வெல்ல வருவது அர்ஜுனனுக்கும் நமக்கும் ஒரு பெரிய பிரம்மையை ஏற்படுத்துகிறது. நான்கு திசை ஆயுதங்களால் அவர்களனைவரையும் வென்று விடுகிறான். கடைசியாக வரும் தெய்வத்தின் மீது எய்தப்படும் அம்புகளனைத்தும் தண்ணீரில் உள்ள மீன்களில் குத்தப்பட்டு, ஆமையின் ஓடென மேலெழும்பி, பன்றியின் முள் உடம்பென மாறுவதைக் கண்டு விக்கித்துப் போகிறான். அது கிருஷ்ணன் என்பதை அர்ஜுனனும் நாமும் உணர்ந்து கொள்கிறோம். அழிக்க அழிக்க அடுத்த அவதாரமெடுக்கும் கிருஷ்ணனிடம் அர்ஜூனன் மீண்டும் நிராயுதபாணியாக அடிபட்டுத் திரும்புகிறான் குற்றுயிராக.

கி்ருஷ்ணனை வெல்ல இன்னமும் ஏதோ ஒன்று தேவைப்படுவதை உணர்ந்து தன்னுடைய இந்தப் பயணம் முற்றுப் பெறவில்லை என்பதை அர்ஜுனன் உணர்ந்து கொள்கிறான். இதற்குப் பின் அவன் சென்று சேரும் இடம் இருண்மைகளற்ற இடம். தான் என்ற ஆணவத்தை கரைக்கும் இடம். பொருட்கள் தங்கள் மேல் போர்த்தப்பட்டிருந்த ஆடையெனும் சொற்களைத் துறந்த நிலம். இறப்பு எனும் காலன் நம் பிறப்பில் இருந்தே கூடப் பயணிக்கும் நிழல் என்பதை உணர்ந்த மனிதர்கள் வாழும் நிலம்.

கடும் பசியில் அக்காட்டிலிருந்த ஒரு பன்றியை வேட்டையாட விழைகிறான் அர்ஜுனன். அவன் அம்பு படுவதற்கு முன்பே அப்பன்றியின்மேல் இன்னொரு அம்பு பாய்ந்திருப்பதைக் கண்டு துணுக்குறுகிறான். இந்த வில்லாளனின் கண்களில் அப்போதுதான் அங்கிருந்த காட்டாளன் தென்படுகிறான். அவனுடைய பழங்குடித் தோற்றம் இயல்பாகவே அர்ஜுனனுக்குள் இருந்த ஆணவத்திற்கு தீனி போட்டு தன் பராக்கிரமங்களை சொல்லி இந்த பன்றி எனக்குச் சொந்தம் எனச் சொல்ல வைக்கிறது. அதற்கு அந்த காட்டாளன் நக்கலாக உங்களை ஊரே தெரிந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் காளன் எனும் என்னை என் மனைவி காளியும் எனது இரு இளைய மகன்களான கொம்பனும், குமரனும் அறிவர் என்று சொல்லி இந்தப் பன்றி எனக்குத்தான் சொந்தம் என்கிறார். உனக்குப் பசியாக இருந்தால் இதைத் தானமாகத் தருகிறேன் என்றுகூறி அர்ஜுனனின் ஆணவத்தைச் சீண்டுகிறார்.

பன்றியின் பொருட்டு இருவருக்கும் நடந்த வில் போரில் முழுமையாகத் தோற்கடிக்கப்படுகிறான் அர்ஜூனன். தான் எப்படி அம்பு எய்த வேண்டும் என்பதை சிந்திக்கும் போதே காளனின் அம்பு தன்னை வந்தடைவதைக் கண்டு வியப்பும் ஆற்றாமையும் கொள்கிறான். காளனின் சிந்தனைக்கும் செயலுக்கும் இடைவெளியே இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. மார்க்ஸியம் இதை புராதன பொதுவுடைமை சமூகங்களின் இயல்பாக வரையறுக்கிறது. தனியுடைமைச் சமூகங்களில்தான் சிந்தனையும் செயலும் பிரிந்தது என்றும் வரையறுக்கிறது. செயல்படமுடியாத சிந்தனையாளர்களும், சிந்திக்கமுடியாத செயல்பாட்டாளர்களும் தான் தனியுடைமையின் கொடை போலும். விளைவின் மேல் வெளிச்சம் பாய்ச்சும் பாசுபதம், விளைவை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில்லை. அவ்விளைவின்  உள்ளடக்கமான சிந்தனையையும் செயலையும் உருவத்திலிருந்து நிழலைப் பிரிப்பதுபோல் பிரித்துக் காட்டுகிறது. அர்ஜுனனோடு சேர்ந்து நாமும் பாசுபதத்தை, அது உணர்த்தும் மெய்மையை நெருங்குகிறோம்.

காளன் – சைவ சித்தாந்தத்தின் ஊற்று

தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மனமின்றி தன்னைக் கொள்ளும் படி இரைஞ்சும் அர்ஜூனனின் கோரிக்கையை “நான் உண்ணாதவற்றை கொல்வதில்லை” என்று நிராகரிக்கிறான்.  கழுத்தில் கத்தியோடு காளன் முன் மண்டியிட்டிருந்தவனை அதட்டி,  ” நீ தோற்றிருக்கிறாய் என்றால், நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்காய் என்று தானே அர்த்தம்” என்று அர்ஜுனனின் மாயையை, வினையை, ஆணவத்தை புரிய வைக்கிறாள் அங்கு வந்த காளனின் மனைவி காளி. 

இந்தியாவின் இளமையான சித்தாந்தமான சைவ சித்தாந்தத்தின் வேர்கள் எங்கிருந்து தோன்றியவை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. உயிர்களைத்(பசு) தளைப்படுத்தும் பாசத்தை 

1.தான் என்ற தன்னுணர்வு கொண்ட ஆணவம், 

2. அதன் பொருட்டு ஆற்றப்படும் கண்மம் அல்லது வினை மற்றும் 

3.அவ்வினையின் வழியாக உணரும் உலகமும் உடலும் மாயை என்ற புரிதல்

 என மும்மலங்களாக பிரிக்கிறது சைவசித்தாந்தம்.

தன்னுடைய வினைகளின் வழியாகவே ஆணவம் கரைந்து மாயை உணர்ந்து பதியை (கடவுளை) அடைய முடிகிறது. தன்னுடைய பயணம் அனைத்தும் இந்த தான் என்ற தன்னுணர்வு கொண்ட இந்த ஆணவத்தின் பொருட்டே என்றுணரும் அர்ஜுனனுக்கு காளனும் காளியும் பதிகளே.

இந்த மும்மலங்களை அவற்றாலேயே அறுத்தெரிந்த அர்ஜுனனுக்கு இருண்மையற்றிருக்கும் நிலையென்றால் என்னவென்று புரிகிறது.  காளன் வாழும் இந்த இருண்மையற்ற நிலத்தில் வாழும் மக்களுக்கு பாசுபதம் “ஓம்” என்ற முதல் சொல்லிருந்தே கிடைத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்கிறான். அதிலிருந்தே தற்போது இருக்கும் அனைத்து வேதங்களுமே கிளைத்து வளர்ந்திருக்கின்றன. இனி தோன்றி இந்திரனின் அவியை மறுக்கப்போகும் மகாநாராயண வேதம் முதற்கொண்டு என்ற புரிதலுடன் என் கிராதப் பயணம் நிறைவுற்றது.

3 thoughts on “கிராதம் – On the job Training for Arjuna”

  1. அன்பு நண்பருக்கு , மிகவும் நேர்த்தியாகத் தொகுத்து எழுதியுள்ளீர் . கிராதத்தை வாசித்துவிட்டு இணையத்தில் சக வாசிப்பாளனின் விமர்சனத்தைத் தேடுகையில் இங்கு வந்தடைந்தேன். உங்களின் கிராதம் குறித்த பார்வை அழகு. மென்மேலும் எழுதுங்கள்!🙏🏽🙏🏽

    Liked by 1 person

Leave a comment