“I need a queen from this Group to Play the Game called ‘Queen of Sheeba’…” என புன்னகைத்துக் கொண்டே தொகுப்பாளர் அந்த அறையில் கூடியிருந்தவர்களை சுற்றுமுற்றும் நோக்க, இயல்பாகவே அங்கிருந்த பெண்களின் கைகள் தங்கள் கூந்தலை கோத ஆரம்பித்திருந்தது, எங்கே தன்னை அழைத்து விடுவார்களோ என்ற மெல்லிய பதற்றத்தோடு. அங்கிருந்த ராணிகளின் முகத்தில் சிறு கீற்றாக தோன்ற ஆரம்பித்த வெட்கப் புன்னகை, “All women are Queens only” என்ற அங்கிருந்த கிருஷ்ணரின் வார்த்தைகளில், கண நேரத்தில் வெடித்துச்சிதறி பரவி அறைமுழுதும் நிறைந்தது.
அங்கிருந்த பசுமையை ஊடறத்து (இரண்டாக வெட்டி) செல்லும் சாலையில் எங்களை ஏந்திச்சென்று கொண்டிருந்தது ‘Ellamman’ஐ (அதாங்க எல்லையம்மன்) துணையாக கொண்ட டெம்போ ஊர்தி. அவசரத்தில் ‘i’ஐ விட்டிருக்கிறார்கள். ஓட்டுநரும் ‘நான்’ஐத் துறந்த ஐயப்பசாமி போலதான் இருந்தார். சென்னையின் எஞ்சியிருக்கும் பசுமை எப்போதுமே கிளர்ச்சியூட்டுவது. வெகுநாட்களுக்குப் பிறகு பசுமை நிறைந்த வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் வார இறுதியில் ஒரு பயணம். மேற்சொன்ன அழகிய தருணங்களை உள்ளடக்கிய அலுவலகத்தின் ஆண்டு இறுதி கொண்டாட்டத்திற்காக.
டிசம்பர் மாத சென்னைமேல் காதல் கொள்ளாத சென்னைவாசிகளே இருக்கமுடியாது. வெள்ளம் மற்றும் வர்தா புயலால் கொஞ்சம் பயம் கூடியிருந்தாலும், காதல் இன்னும் குறையவில்லை. இசை, மழை, குளிர், அடர்தாடி முகங்கள் (ஐயப்பன் சீசன்) போன்றவற்றுடன் இதுபோன்ற அலுவலகம் சார்ந்த ஆண்டு இறுதி கொண்டாட்டங்களும் டிசம்பரின் பன்முகங்களில் ஒன்றாகிப் போயிருக்கிறது.
காங்கிரீட் சுவர்கள் அமைத்த செயற்கை எல்லைகளை மீறி வளரத்துடிக்கும் புரட்சி மரங்களை அச்சாலை முழுதும் காணமுடிந்தது. அங்கிருந்த பசுமையில் நனைந்து போயிருந்த கண்கள், திடீரென உலர ஆரம்பித்ததை உணர்ந்த போது, டெம்போ கேளம்பாக்கம் தாண்டி கிழக்கு கடற்கரைச் சாலையில் விரைந்து கொண்டிருந்தது. பசுமைக்கு வழியில்லாத உப்பு நிலங்கள் இருபுறமும் காங்கிரீட் வனங்களாக மாறிபோயிருந்தது. அந்நிலங்களில் எஞ்சியிருக்கும் உப்புத்தன்மையை, முகத்திலறைந்த வெம்மையான காற்று உணர்த்தியது. மணி 11ஐத் தொட்டிருந்நது. அலுவலகத்திலிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒண்ணேகால் மணிநேரமாயிருந்தது. உள்ளிருந்த இருபது பேரும் தங்களுடைய கைப்பேசியின் தொடுதிரையில் மூழ்கிப் போயிருந்தார்கள். பக்ஷிராஜன் நினைவுக்கு வந்து பயமுறுத்தினார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் ‘சொல்வளர்காடு’ எனும் நாவலில் வரும் சாந்தீபனக் காட்டில், கிருஷ்ணரால் வளர்த்தெடுக்கப்பட்ட சாந்த்யோக் உபநிடதத்தைப் பற்றிய என்னுடைய உரையின் காணொளியைக் ஏற்கனவே கேட்டிருந்த ஶ்ரீராமும் “என்ன முத்து, அடுத்த இலக்கியச் சொற்பொழிவுக்கு ரெடியாய்ட்டிங்க போல” என்று கலாய்த்துக் கொண்டே அயர்ச்சியில் தூங்கிப்போயிருந்தார். செய்வதறியாமல் மீண்டும் கண்களை சன்னல் வழி வீசியபோது உத்தண்டி கோயிலிலுள்ள குளத்தில் ஒருவரை திருமண பாக்கியம் வேண்டி மூழ்கடித்துக் கொண்டிருந்த காட்சி சிக்கியது. கல்யாணத்திற்கு அப்புறம் என்ன நடக்கும் என்பதை குறிப்புணர்த்துவது போலிருந்தது அக்காட்சி.
கிழக்கு கடற்கரை சாலையின் மிக முக்கிய அடையாளமான MGM விடுதியைத் தாண்டியிருந்தது டெம்போ. மணியும் 11.30த் தாண்டியிருந்தது. சற்று நேரத்தில், சாலையின் இடதுபுற ஓரம்வரை நெருக்கியடித்து பிரமாண்டமாய் கட்டப்பட்டிருந்த Landmark Pallava எனும் விடுதியின் நுழைவாயில் எங்கள் டெம்போவை உள்வாங்கிக் கொண்டது. முற்றிலும் வெள்ளை நிறக் கட்டிடங்களால் நிரப்பட்டிருந்த அந்நிலப்பரப்பில் சில்லென்ற காற்றையள்ளி வீசும் கடற்கரை எங்கிருக்குமோ என்று மனம் பதறினாலும், தொண்டையை நனைத்துக் கொள்ள நாக்கிற்கு தண்ணீர்தான் தேவைப்பட்டது. வழக்கமான டிசம்பரின் மென்மையை இழந்து சற்றே சுட்டெரித்தது வெயில்.
தரைதளத்தில் வெள்ளைச் சட்டையும், கருப்பு பேண்ட்டுமாய் நிறைய விடலைப் பையன்கள் நின்றிருந்தார்கள், அவ்விடுதியின் சிப்பந்திகளாக. அவர்கள் கண்களிலிருந்த மிரட்சியும், முகத்திலிருந்த வெட்கமும் எனது முதல் நிறுவனத்தின் முதல் வேலைநாளை நினைவுகளிலிருந்து மீட்டெடுத்தது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இன்னமும் பரிட்சயமாகாத இவர்கள், இங்கு புற்றீசல்போல பெருகிவிட்ட விருந்தோம்பல்(Hospitality) சார்ந்த தொழில்துறைகளில் பணியாற்றுவதற்கு தேவையான மனிதவளத்தை உருவாக்கும் கல்லூரிகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டிருக்கலாம்.
வழக்கமான ஆரம்பத் தடுமாற்றங்களுக்குப் பிறகு நிகழ்வுக்கான முதல் தளத்தை அடைந்து அங்கிருந்த லஷ்மி மற்றும் ஶ்ரீராமிடம் வருகையைப் பதிந்து விட்டு அறையில் நுழைந்தவுடன் பருகத் தரப்பட்ட திராட்சைப்பழச்சாறு இதமாக தொண்டையை நனைத்து ‘திராட்சை பழம்போலே…’ என்ற ‘சொர்க்கம் மதுவிலே….’ பாடலின் வரிகளை நினைவுக்கு கொண்டுவந்து ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. கூடவே மென் ரொட்டிகளுக்கிடையே வைத்து தரப்பட்ட பச்சைக் காய்கறிகள் (அதாங்க சேண்ட்விச்) அங்கு நடைபெறப்போகும் நிகழ்வுகளுக்கு தேவையான ஆற்றலை பெறுவதற்கு போதுமானதாக இருந்தது.
அடுத்த இருமணி நேரங்களுக்கு அங்கிருத்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன்பிடியில் எடுத்துக் கொண்ட அந்த இரு தொகுப்பாளர்களின் நிபுணத்துவமும் நம்மை வாய்பிளக்கச் செய்பவை…
The Game….To be continued… .
தொடர்ச்சி…
https://muthusitharal.com/2018/12/19/டிசம்பர்-கொண்டாட்டம்-part-2/
[…] https://muthusitharal.com/2018/12/15/டிசம்பர்-கொண்டாட்டம்-part… […]
LikeLike
[…] https://muthusitharal.com/2018/12/15/டிசம்பர்-கொண்டாட்டம்-part… […]
LikeLike