வாசிப்பும் எழுத்தும்

 

காற்றில் மிதப்பது போல் உள்ளது.

என்னுடைய இரு கடிதங்கள் இன்று எழுத்தாளர் ஜெமோவின் (ஜெயமோகன்) இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது முதல் தடவை இல்லையென்றாலும், ஒவ்வொரு தடவையும் இந்தப் பரவசம் மட்டும் முளைத்து கொண்டே இருக்கிறது.

 

தொடர்பு கொள்ளலென்பது (communication) உணர்வுருவங்களாகவும் (emojis), விருப்பங்களாகவும்(likes) மற்றும் ஓரிருவரி பின்னூட்டங்களாகவும்(comments) சுருங்கி விட்ட சமூகவலைத் தொடர்பு மிகுந்திருக்கும் நவீனச் சூழலில்,

கடிதமா? இந்த காலத்திலா? அதுவும் எழுத்தாளருக்கா? எனற கேள்விகள் முடிவில்லாமல் முளைத்துக் கொண்டே இருக்கின்றன.

 

சென்னை வெள்ளத்திற்கு முன்னால் நானும் இந்த கேள்விகளைத் தான் கேட்டிருப்பேன். 2015 வெள்ளம் சென்னையை புரட்டியதைப் போல என்னையும் புரட்டித்தான் போட்டது ‘இந்து மெய்ஞான மரபில் ஆறுதரிசனங்கள்’ என்னும் ஜெமோவின் புத்தகம் வழியாக.

ஆறடி உயர தண்ணீர் அரணால் சுற்றி வளைக்கப்பட்ட என்னுடைய அபார்ட்மென்டின் 3வது தளத்தில் செய்வதறியாமல் விழிபிதுங்கி, தண்ணீர் வடியும் வரை செய்வதற்கொன்றுமில்லை என்ற ஞானத்தை அடைந்து கையிலெடுத்தது தான் இந்த புத்தகம்.

 

எனக்கிது ஒரு பரிணாம வளர்ச்சியென்று தான் சொல்லவேண்டும். கலங்கியிருந்த ஓடை தெளிந்து அதன் ஆழத்தை வெளிகாட்டியதைப் போல, இந்து ஞான மரபை வெறும் மதச் சடங்குகளாக மட்டும் சுருக்கியிருந்த எனக்கு அதன் தத்துவ ஆழங்களை காட்டியது இப்புத்தகம்.

 

அங்கே தொடங்கியது தான் ஜெமோவுடனான என் பயணம். விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல் மற்றும் வெண்முரசு வரிசையின் தற்போதைய நாவலான மாமலர் வரை  தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

இவற்றை வாசிக்கும்போதெல்லாம் ஏதாவது எழுத உந்தப்பட்டதன் விளைவே கடிதங்களாகத் ஆரம்பித்து இந்த blog தொடங்கியது வரை நீடித்திருக்கிறது.

 

மேலும், சமூகவலைதளங்களின் மூலம் என்னுடன் தொடர்பிலுள்ளவர்களை விட ஜெமோவிடம் நெருக்கமாக உணரமுடிகிறது. ஒரு நெருங்கிய நண்பரோ, உறவினரோப் போல. இதற்கு முக்கிய காரணமாக நானென்னுவது அவர் எழுத்துக்களின் வழியாக கண்டடைந்த என் அவதானிப்புக்களை (insights or contemplation) தொடர்ச்சியாக கடிதங்கள் வழியே அவரிடம் வெளிப்படுத்திக் கொண்டது தான்.

 

சராசரியாக வாரமொரு கடிதமாவது  எழுதுகிறேன். அவற்றில் பெரும்பாலானவை அவரின் இணையதளத்தில் பிரசுரிக்கும் தகுதியைப் பெற்றிருக்கின்றன.

 

அப்படிப்பட்ட இரண்டு கடிதங்கள் இன்று ஒரே நாளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஒன்று மத்திய அரசாங்கத்தின் தூய்மை பாரதம் திட்டம் பற்றியது (ஜெமோ இலக்கியத்தோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை).

 

இன்னொன்று, நத்தையின் பாதை என்ற மரபுகளை உணர்வதின் அவசியத்தை வலியுறுத்தும் தொடர் பற்றியது. இத்தொடர் தடம் என்னும் விகடனின் இலக்கிய இதழிலும் வெளிவருகிறது.

 

http://www.jeyamohan.in/103868#.Wg51b8tX7R4

 

http://www.jeyamohan.in/103864#.Wg51oMtX7R4
நானாக இக்கடிதங்களை எழுதுவதில்லை. பெரும்பாலும், வாசிப்பு தான் என்னை எடுத்து எழுதிக்கொள்கிறது.

Leave a comment